ஜெ. பாணியில் 'ஒன் டென்' அறிவிப்புகள்... அதிகாரிகள் சந்திப்பு- களைகட்டும் எடப்பாடி கோட்டை
110-வது விதியின் கீழ் அறிவிப்புகள் தொடங்கி ஜெயலலிதா பாணியில் செயல்படுவதில் குறியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகள், இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் சந்திப்புகள் என ஜெயலலிதா பாணியை அப்படியே பின்பற்றுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா ஆட்சியில் ஓபிஎஸ்-க்கு அடுத்த இடத்தில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓபிஎஸ்.
அப்போது ஜெயலலிதாவின் விசுவாசியாக காட்டிக் கொள்ள ஏகப்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார் ஓபிஎஸ். ஆனால் சசிகலா கோஷ்டியின் நெருக்கடியால் ஓபிஎஸ் ராஜினாமா செய்ய நேரிட்டது.
சிறைக்குப் போன சசி
ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பி தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்கினார். முதல்வர் நாற்காலியில் உட்கார சசிகலா முயற்சித்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம்தான் கிடைத்தது சசிகலாவுக்கு.
எடப்பாடி கோஷ்டி
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது. இதையடுத்து தமக்கான வலுவான அணியை உருவாக்குவதில் மவுனமாக இருந்து சாதித்து வருகிறார் எடப்பாடி. இப்போது தினகரனுடன் மல்லுக்கட்டும் வகையில் எடப்பாடி கோஷ்டி வலிமையாக இருந்து வருகிறது.
ஜெ.க்கு படத்துக்கு இணையாக
தமது கோஷ்டியை வலுப்படுத்திய கையோடு அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்துக்கு இணையாக தம்முடைய படத்தை வைக்க உத்தரவிட்டார் எடப்பாடி. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா பாணியில் 110- விதியின் கீழ் அறிவிப்புகளை அள்ளிவிட்டார் எடப்பாடி.
களைகட்டும் எடப்பாடி கோட்டை
முன்னர் இடம் மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அதேபாணியில் தற்போதும் அதிகாரிகளை கூட்டமாக அழைத்து சந்திக்கிறார் எடப்பாடி. இப்போது எடப்பாடியின் கோட்டை ரொம்பவே களைகட்டியிருக்கிறது என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.