விவசாயிகள் தற்கொலை விவகாரம்... ஆட்சியர்களை கைகாட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
விவசாயிகள் மரணம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள்தான் அறிக்கை தந்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: விவசாயிகள் மரணம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள்தான் அறிக்கை தந்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சியர்களின் அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். பின்னர் 30 கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறித்து செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர்.
ஆட்சியர்கள் தான்..
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் மரணம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தான் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர் என்றார். மேலும் அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் அதிர்ச்சி..
தமிழகத்திலும் டெல்லியிலும் விவசாயிகள் தற்கொலையை தடுக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், விவசாயிகள் மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எல்லாமே ஆட்சியர்கள் தான் என்பது போல் முதல்வர் பேசியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை
மேலும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழகத்தில் மின்வெட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதுபோன்று யாரும் செயல்பட்டதில்லை
அரசு இயந்திரம் வேகமாகவும் துரிதமாகவும் செயல்படுகிறது. என்றும் அவர் கூறினார். கோப்புகள் எதுவும் தேக்கமடையவில்லை. இதற்கு முன்னர் இதுபோன்று யாரும் செயல்பட்டதில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
சாலைகள் மாற்றப்படவில்லை
டாஸ்மாக் கடைகளுக்காக சாலைகள் மாற்றப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.