தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி- 30 அமைச்சர்களும் பதவியேற்பு!
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
சென்னை: தமிழகத்தின் 13-வது முதல்வராக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் கூட்டாக பதவியேற்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
முடிவெடுக்காத ஆளுநர்
அப்போது முதல்வர் ஓபிஎஸ் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கலகக் குரல் எழுப்பினார். இதனால் தமக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தேவை என ஆளுநரிடம் வலியுறுத்தினார். ஆனால் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சசிக்கு சிறை- எடப்பாடி தேர்வு
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதிகாரப்பூர்வ அழைப்புஇச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். வழக்கம் போல கோரஸாக அமைச்சர்கள் பதவியேற்றனர்.
15 நாட்களில் பெரும்பான்மை
முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கனவே ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.