காலத்தின் கோலம்... எடப்பாடியை சமாதானப்படுத்த களம் குதித்த சசிகலா தரப்பு!
அதிமுகவையும் ஆட்சியையும் தமது வசம் கைப்பற்றிவிட்ட எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்த சசிகலா தரப்பு படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக ஒற்றுமையோடு செயல்பட வேண்டியது அவசியம் என அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை வருகிறது. ஆனால், சசிகலா குடும்பத்துக்கு எதிரான வியூகத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதால், அவரை சமரசப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கின்றனர் சசிகலா உறவினர்கள்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.கவை முழுமையாக கொங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் அமைச்சர்கள் சிலர். தேர்தல் ஆணையத்தில் சசிகலா நியமனத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பொதுச் செயலாளர் பதவிக்கும் வருவார் என உறுதியாகச் சொல்கின்றனர் கொங்கு அ.தி.மு.கவினர்.
இந்த அடிப்படையில்தான், ஓபிஎஸ்-க்கு எதிராகவும் தினகரனுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர் என்ற கருத்தும் பரவி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் தினகரன் பக்கம் இருக்கும் பலர், எடப்பாடி தரப்பிடம் காரியம் சாதித்துக் கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவை, ஒப்பந்தங்களில் போதுமான கமிஷன்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இதை உணர்ந்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அமைச்சர்கள் செய்து தருகின்றனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் சொல்லும் ஆட்களுக்கே பணிகளும் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மட்டும் இந்த வசதிகள் இல்லை. எதிர்க்கட்சியான தி.மு.க எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் நடக்கும் பணிகளுக்கும் சரியான கமிஷன் கொடுக்கப்படுகிறதாம்.
சசிகலா தரப்பு
கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் என அனைத்து தரப்பினரையும் வளைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தினம்தோறும் கிடைக்கும் தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் எடப்பாடி. திவாகரனின் நடவடிக்கைகளையும் தினகரனின் செயல்பாடுகளையும் அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஓபிஎஸ் இமேஜூக்கு குறி
இருப்பினும், இவர்கள் இருவரும் தி.மு.கவோடு சேர்ந்து கொண்டு சதிவேலையில் ஈடுபடுகிறார்களா? என்றுதான் கவனிக்கிறார். ஓபிஎஸ்-ன் இமேஜைக் கெடுக்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. சொந்த ஊரில் கிணறு பிரச்னையால் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார் ஓ.பி.எஸ். இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையைச் செய்தது உளவுத்துறைதான்.
அமைச்சர்கள் சமாதானம்
அதிமுக கட்சி என்றால் இனி நான் மட்டும்தான் என்ற சூழலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரத்தை திவாகரனும் புரிந்து வைத்திருக்கிறார். அவரை சந்திக்க வரும் அமைச்சர்கள் சிலரும், உங்களைப் பார்க்க போறோம்னு எடப்பாடி அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். எங்களைத் தப்பா எடுத்துக்காதீங்க. அவர் கையில் எல்லா அதிகாரமும் இருக்கு. என்ன வேணாலும் செய்வார். முதலமைச்சர் பதவியின் வலிமையை உணர்ந்து வைத்திருக்கிறார். அவரிடம் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும் என விளக்கியுள்ளனர்.
நீங்களாக விலகுங்கள்
இதை உணர்ந்து, எடப்பாடியை குளிர்விக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சசிகலா உறவுகள். எடப்பாடியும், இந்தப் பதவியைக் கொடுத்தது உங்கள் குடும்பம்தான். அதற்காக காலம் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். ஆனால், டெல்லி சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்களை நான் எதிரியாக நினைக்கவில்லை. எதிராக எதையும் செய்ய மாட்டேன். நீங்களாக புரிந்து கொண்டு விலகிக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டார்.
தினகரன் திட்டம்
இன்னொரு புறம் ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பிறகு மாவட்ட தலைநகரங்களில் பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். இந்த பொதுக்கூட்டத்துக்கு போலீஸின் அனுமதியும் கிடைக்கப் போவதில்லை. சரிந்து போன அவருடைய இமேஜ், சரியாகவும் வாய்ப்பில்லை. இதை உணர்ந்துதான ஆழ்ந்த கவலையில் இருக்கிறாராம் தினகரன்.