எனக்கு இவ்வளவுதான் மரியாதையா?.. செங்கோட்டையாரிடம் கொதித்த எடப்பாடியார்!
சென்னை: கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல், முதல்வரான என்னைப் போய் தேர்தல் பணிக் குழுவில் நியமித்துள்ளாரே தினகரன் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் புலம்பியுள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி மொத்த அமைச்சர்களையும் பிரசாரக் களத்தில் இறக்குவார். தேர்தல் பணிக்குழுக்களையும் அமைப்பார்.
இடைத் தேர்தலுக்குக் கூட பெரிய சைஸ் குழுவைத்தான் அமைப்பது ஜெயலலிதா வழக்கம். அந்த வகையில் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியிலும் பெரிய சைஸ் தேர்தல் பணிக்குழுவை இறக்கியுள்ளது சசிகலா குரூப்.
152 பேர் குழு
தனது வெற்றிக்காக உழைப்பதற்கு 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறார் தினகரன். அதில் முதல்வர் எடப்படியும் அடக்கம். எடப்பாடி உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எடப்பாடியை எப்படி நியமிக்கலாம்
அதாவது, மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்யமாட்டார்கள். ஏனெனில், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சனைகளில் குறித்து முதல்வரிடம் உயரதிகாரிகள் ஆலோசிப்பர். அப்படிப்பட்ட நிலையில் ஒரு தொகுதிக்குள் முதல்வர் முடங்கிப்போனால் நிர்வாக பிரச்சனைகளை யார் கவனிப்பது?
சிறுமைப்படுத்திட்டாங்களே
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிக்குழுவில் முதல்வரை நியமித்து அவரது பதவியை சிறுமைப்படுத்திவிடக்கூடாது என்பது போன்ற காரனங்களால் முதல்வரை தேர்தல் பனிக்குழுவில் நியமிப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் திட்டமிட்டு எடப்பாடியாரை சிறுமைப்படுத்தி விட்டார் தினகரன் என்று பேச்சு எழுந்துள்ளது.
எடப்பாடி கோபம்
அதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் எடப்பாடியை போட்டுள்ளார் தினகரன். தேர்தல் பனிக்குழுவில் தன்னையும் இனைத்ததை எடப்பாடி ரசிக்கவில்லையாம். செங்கோட்டையனிடம் வருத்தப்பட்டுள்ளார் முதல்வர்.
ஜெ. செய்யாததையா நான் செஞ்சேன்
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலில் பன்னீரையும் உள்ளடக்கி தேர்தல் பணிக்குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். அது போலத்தான் நானும் செய்துள்ளேன் என்கிறாராம் தினகரன்.
அடப் போங்கப்பா
எடப்பாடியை உங்களுக்கு கீழாக நினைத்துக் கொள்ளுங்கள் பிரச்சனை இல்லை. ஆனால் முதல்வர் பதவிக்கு மரியாதை இருக்கிறது. அதைத் தரலாமே என சிலர் எடுத்துச்சொன்னதையும் அலட்சியப்படுத்திவிட்டாராம் தினகரன். அதானே. அதையெல்லாம் மதிச்சிருந்தாதான் அதிமுக இப்படி ஆகியிருக்காதே!