கட்சி, ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் சசிகலா... கறார் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி
ஆட்சியையும் கட்சியையும் தன் பக்கம் கொண்டு வருவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை எதிர்கொள்ளும் சசிகலா, ரிவியூ மனுவின் அடிப்படையில் வெளியில் வரத் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன் பக்கம் கொண்டு வருவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் இப்போதய ஒரே குறிக்கோள் எப்படியாவது வெளியே வர வேண்டும் என்பதுதான். ஆறு மாத காலம் வெளியில் இருந்தாலே கட்சியைக் காப்பாற்றிவிடலாம். பொதுச் செயலாளர் பதவியும் பறிபோகாது என நம்பிக் கொண்டிருக்கிறார்.
சட்டரீதியான உதவிகளை டெல்லி செய்ய வேண்டும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் வேண்டுகோள் வைத்தார் சசிகலா. ' நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் உதவிகள் கிடைக்கும்' என நம்பிக்கை அளித்தார் தம்பிதுரை.
குடும்பத்தினரின் மவுனம்
இதன் எதிரொலியாகத்தான், சசிகலா குடும்பத்தின் தினகரனோ, திவாகரனோ எந்தக் கருத்துக்களையும் கூறாமல் மௌனம் காக்கின்றனர். ஆட்சியைப் பற்றி நற்சான்றிதழ் வாசித்த, நடராசன் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. தினகரனைப் புகழ்ந்து பாடுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருந்த நாஞ்சில் சம்பத்தும் அமைதியாக இருக்கிறார். எம்.எல்.ஏக்கள் வெற்றிவேலும் தமிழ்ச்செல்வனும்தான் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கின்றனர் சசிகலா குடும்பத்தினர்.
கொங்கு மண்டலம் உடும்பு பிடி
இதற்கிடையில், கட்சிக்குள் தனக்கான பலத்தை உருவாக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர், " கட்சியும் ஆட்சியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர் என்றார்.
விட்டுத்தர தயாரில்லை
நீண்டநாட்களுக்குப் பிறகு, தங்களை நோக்கி வந்த உயர்ந்த பதவியை விட்டுக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. ஆட்சிக்கு எதிராக தி.மு.கவுடன் கை கோர்க்கும் எம்.எல்.ஏக்களையும் அவர் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.
தீபா அறிக்கைக்கு கமெண்ட்
நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்தனர் கருணாஸ், தனியரசு, அன்சாரி உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள். இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தீபா, ' இது அம்மாவுக்கு செய்யும் துரோகம்' என்றார். இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி, ' தீபா சொல்வது சரியான கருத்துதான். நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிறார். இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்றார்.
அமைச்சர்களிடம் ஆலோசனை
முன்பு பன்னீர்செல்வம், ஸ்டாலினிடம் சிரித்துப் பேசியதை துரோகம் என்றார் சசிகலா. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை' என சிரித்துக் கொண்டே பேசியிருக்கிறார். அமைச்சர்களும் இந்தக் கருத்தை ஆமோதித்துள்ளனர். இதையடுத்து, ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு, என்ன செய்ய வேண்டும் என்பதை அமைச்சர்கள் வழியாகக் கேட்டு அறிந்து வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி கறார்
எந்த இடத்திலும் பணத்தை வாரியிறைக்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லை. ' மாவட்டங்களில் நடக்கும் அரசுப் பணிகளுக்கு, நீங்கள் குறிப்பிடும் நபருக்கு பணிகளைத் தருகிறோம். வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம். அமைச்சர் பதவியையும் யாரும் எதிர்பார்க்க வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார்.
சுயருபம் வெளியாகும்
எனவேதான், எடப்பாடியை வழிக்குக் கொண்டு வருவதற்காக ஸ்டாலினை சந்தித்துப் பேசுகின்றனர். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் மேலும் சிலர் தி.மு.கவினரிடம் நல்ல உறவில் உள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது, அம்மா அணி எம்.எல்.ஏக்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள் என்றார் விரிவாக.