சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்று மோசடி.. சென்னை தனியார் பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை
கொடுங்கையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ முறை பாடத்திட்டம் கற்பிப்பதாக கூறி மோசடி செய்ததாக புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை இன்று விசாரணை நடத்தினர்.
சென்னை: கொடுங்கையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ முறை பாடத்திட்டம் கற்பிப்பதாக கூறி மோசடி செய்ததாக புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை இன்று விசாரணை நடத்தினர்.
சென்னை, கொடுங்கையூரில் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மழலையர் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதாக கூறியதால் இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்ககள் படித்து வருகின்றனர். பொதுவாக சிபிஎஸ்இ, மெட்ரிக் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டணங்களை பள்ளி நிர்வாகம் வசூலித்து வருகின்றன. மெட்ரிக்கை காட்டிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு கட்டணம் அதிகமாகும்.
மாற்று சான்றிதழில்...
இந்நிலையில் அண்மையில் ஒரு மாணவர் அந்த பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் (டிசி) பெற்றார். அதை கண்ட பெற்றோருக்கு அதிர்ச்சி. காரணம் அந்த டிசியில் சிபிஎஸ்இ என்று குறிப்பிடாமல் மெட்ரிக் பள்ளி என அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இணையதளத்தில் ஆய்வு செய்தபோது அந்த பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரத்தை பெறவில்லை என்று தெரிந்தது.
முற்றுகை
மெட்ரிக் பள்ளிக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான கட்டணத்தை 3 ஆண்டுகளாக வசூலித்ததாக பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
எம்எல்ஏ பேச்சுவார்த்தை
பின்னர் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில பெற்றோர்களும், போலீஸாரும் உடனிருந்தனர். சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றது. எனினும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 3 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்தி வருவதாக நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டனர்.
கட்டணத்தை திருப்பி தர தயார்
மேலும் மாணவர்களிடம் வசூலித்த சிபிஎஸ்இ-க்கான கட்டணத்தை பெற்றோர் விரும்பினால் திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பள்ளியில் இன்று கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது திடுக் தகவல் வெளியானது.
வெறும் மழலையர் பள்ளியே
அதாவது அநத பள்ளி மெட்ரிக் பள்ளியும் அல்ல என்றும் மழலையர் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மழலையர் பள்ளிக்கான அனுமதி பெற்று செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 6 மற்றும் 7-ஆம் வகுப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. புதியதாக வகுப்புகளை தொடங்கி சி.பி.எஸ்.இ. பள்ளியாக பெயர் மாற்றம் செய்து மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது விசாரணையின் மூலம் வெளிவந்தது.