தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருகிறது: ஜி.கே.மணி வேதனை
செங்கோட்டை: தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருவதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
நெல்லையில் வரும் ஜூலை 1ம் தேதி பாமக சார்பில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது. இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்து வருகிறார்.
நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் உள்ள கட்சியினரை சந்தித்தார். செங்கோட்டைக்கு வந்த அவர் வீரவாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் கடுமையான அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தில் மிகபெரிய கேடு விளைவிக்கும் செயலாக ஜனநாயக படுகொலைக்கான எடுத்துக்காட்டு சட்டசபை உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் இப்படி ஒரு ஆட்சி. இது நாட்டுக்கே தலைகுனிவு உருவாக்கும் சம்பவம். இது ஊழலுக்கு வழிவகுக்கும், தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கல்வித்தரம் என்பது மோசமாகித்தான் வருகிறது.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் ஆந்திரா மாநிலம் 11 முதல் 14 சதவிகிதங்களையும், பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகார் 6 முதல் 10 சதவிகித இடத்தை பிடித்துவிடுகின்றன. ஆனால் தமிழகம் 1.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதங்களை மட்டுமே பெறுகின்றன. தமிழகத்தில் மோசமாக கல்வித்தரம் போய்விட்டது என்றார்.