சென்னை, கோவையில் சந்திரபாபு நாயுடு உருவ பொம்மை எரிப்பு- நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கோவை மதுரையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஆந்திரா நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அப்போது, ஆந்திர டிஜிபி மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ஆந்திர அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தியாகராய நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ஆர்பாட்டம்
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகே சமம் மக்கள் இயக்கம் என்ற அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
கோவையில் போராட்டம்
கோவையில் ஆதிதமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் குப்புசாமி தலைமையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் எரிக்க முயன்றனர். இதற்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் அனுமதி மறுத்து உருவ பொம்மையை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். அப்போது விடுதலை இயக்கத்தினர் தடையை மீறி உருவ பொம்மைக்கு தீ வைக்க முயன்றனர். இரு தரப்பினரும் உருவ பொம்மையை இழுக்க முயன்ற போது பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறிய குப்புசாமி உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா வங்கி முற்றுகை
மறுமலர்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் நிர்வாகி சந்திரன் தலைமையில் சிலர் கோவை ராம்நகரில் உள்ள ஆந்திரா வங்கியை முற்றுகையிட முயன்றனர். காட்டூர் போலீசார் அனுமதி மறுத்து அவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களில் சிலர் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள். இவர்களை போலீசார் தடுத்து வெளியேற்ற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், ஆந்திரா வங்கியின் மீது முற்றுகையில் ஈடுபட்ட ஒருவர் கல் வீசினார். இதில் ஆந்திரா வங்கி இருந்த வளாகத்தின் மேல் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனத்தின் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் சந்திரன் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதை தொடர்ந்து கோவை நகர், புறநகரில் செயல்படும் ஆந்திர நிறுவனங்களுக்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். பாப்பநாயக்கன்பாளையம் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் விரைவு தரிசன டிக்கெட் வழங்கும் மையம், ஆந்திர வங்கி, ஆந்திராவை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள், ஆந்திரா செல்லும் அரசு பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.