சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரின் காவல் செப்.9 வரை நீட்டிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அதனையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
பாதுகாப்பு கருதி கடந்த மாதம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரைக்கும், அதன் பிறகு 12 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 12-ந்தேதி மீண்டும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இன்று வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ராம்குமாரை இன்று புழல் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் எழும்பூர் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை விசாரித்த நீதிபதி, ராம்குமாரின் நீதிமன்ற காவலை வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.