சென்னையை உலுக்கிய எல் நினோ போயிருச்சு.. ஆனால் லா நினா என்ன பாடுபடுத்தப் போகிறதோ!
சென்னை: உலகையே மிரட்டி வந்த எல் நினோ ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எல் நினோவால் தமிழகம், குறிப்பாக சென்னை சந்தித்த பெருவெள்ளத்தை மக்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.
கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்தன.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், படகுகள் மூலம் மீட்கப்பட்டு மக்கள் அகதிகளாக ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டனர். தன் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றது மக்கள் மனதில் நீங்காத வடுவாக நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
பருவமழை...
வழக்கமாக இந்தியாவில் தென் மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நல்ல வெயில் காயும். அக்டோபர் மத்தியிலிருந்து நவம்பர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழை பெய்யும். ஆனால், சமயங்களில் இது மாறுவதுண்டு.
எல் நினோ, லா நினா...
இப்படிப்பட்ட பருவநிலை மாற்றங்களுக்கு, பெரும்பாலான சமயங்களில் வானிலை நிபுணர்கள் கூறும் முக்கியக்காரணம், எல் நினோ மற்றும் லா நினா தான். சமீபத்திய சென்னை வெள்ளப் பாதிப்புக்கும் வானிலை நிபுணர்கள் சொன்ன முக்கிய காரணம் எல் நினோ தான்.
சராசரியை விட அதிகம்...
வழக்கமாக தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக 44 செ.மீட்டர் பெய்யும். அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 1ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சராசரியாக 3.7 செ.மீ., மழை தான் பெய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 9.3 செ.மீ., மழை பெய்தது. இது, சராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.
சென்னை பெருவெள்ளம்...
அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில், சென்னையில் சராசரி மழையளவான 10 செ.மீ.க்கும் அதிகமாக 44 செ.மீ. பெய்தது. இது, 329 சதவீதம் அதிகம். இதேபோல், காஞ்சிபுரத்தில் சராசரி மழையளவான 6 செ.மீ. விட, 45 செ.மீ. பெய்தது. இது, 656 சதவீதம் கூடுதல் ஆகும்.
புயல் காரணமில்லை...
இத்தகைய பேய் மழைக்கு காரணமாக, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் உருவாகவில்லை. எனவே, எல் நினோ இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிவிலக்கும் உண்டு...
ஆனால், எல் நினோ இருக்கும்போது, இந்தியாவில், தென் மேற்கு பருவமழை குறைவாகவும், வட கிழக்கு பருவ மழை கூடுதலாகவும் இருக்கும் என சொன்னாலும், பல ஆண்டுகள், எல் நினோ இருந்த போது, வட கிழக்கு பருவ மழை பொய்த்தும் உள்ளது.
அடுத்த மிரட்டல்...
இப்படியாக எல் நினோ-வால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தே சென்னை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தான் மீண்டு வருகின்றனர். ஆனால், தற்போது எல் நினோ முடிந்து விட்டாலும், அடுத்து லா நினா மிரட்ட வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனால் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கும் அவர்கள், விவசாயத் தொழிலிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.
செம்பரம்பாக்கம் பீதி...
ஏற்கனவே, சென்னை பெரு வெள்ளத்தால், வானத்தில் இருந்து சிறு தூறல் விழுந்தாலே செம்பரம்பாக்கம் அணையத் திறந்து விட்டு விடுவார்களோ என்ற அச்சம் இன்னும் மக்களை விட்டு அகலவில்லை. இந்நிலையில், விஞ்ஞானிகள் மிரட்டும் இந்த லா நினா இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற அச்சம் இப்போதே மக்கள் மத்தியில் உருவாகி விட்டது.