செல்லாது... செல்லாது... என்னை நீக்கம் செய்ய இளங்கோவனுக்கு அதிகாரமில்லை... கொதிக்கும் வசந்த குமார்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்க காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று வசந்தகுமார் கூறியுள்ளார்.
வசந்த குமாரை நீக்கி புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் என்பவரை நியமித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டார். இந்நிலையில் தன்னை பதவியிலிருந்து நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த வசந்த குமார் கூறியதாவது:
நீக்கியதாக உத்தரவு
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் காரணம் எதுவும் குறிப்பிடாமலேயே என்னை வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்தேன். மேலும், நான் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பதாகவும், 23-ம் தேதி முதல் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1998 முதல்
என்னை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1998-ம் ஆண்டு வர்த்தக பிரிவு தலைவராக நியமித்தது. அன்று முதல் இன்று வரை அப்பதவியில் இருந்து கட்சிப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன். கட்சி வளர்ச்சிக்காக வசந்த் தொலைக்காட்சியும் நடத்தி வருகிறேன்.
கட்சி வளர்ச்சிப் பணிகள்
முன்னாள் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, சோ.பாலகிருஷ்ணன், ஞானதேசிகன், தற்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் ஆகியோரின் பதவிக் காலங்களில் வர்த்தக பிரிவு தலைவர் என்ற முறையில் பல கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளேன்.
காரணமே இல்லாமல் நீக்கம் ஏன்
எந்த காரணமும் சொல்லாமல் திடீரென வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கியது ஏன் என தெரியவில்லை. என்னை பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு அதிகாரம் இல்லை. மேலும் என்னை துணைத் தலைவர் பதவியில் நீட்டித்து இருப்பதாக கூறவும் அவருக்கு அதிகாரம் இல்லை. பழி வாங்கும் நோக்கத்துடன் மட்டும்தான் இளங்கோவன் என்னை பதவி நீக்கம் செய்துள்ளார்.
தன்னிச்சையாக செயல்படும் இளங்கோவன்
இளங்கோவன் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக பொறுப்பாளராக இருக்கும் முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நான்தான் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர் நான் தான். இது சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் எந்த முடிவையும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் என்ற முறையில் ஏற்க தயார் என்று அவர் கூறினார்.