தற்கொலை செய்ய மாடியிலிருந்து குதித்த டிரைவர்.. கீழே போன பாட்டி மீது விழுந்து பாட்டி பலி!
சென்னை: தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்தார் ஆட்டோ டிரைவர். ஆனால் கீழே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி மீது விழுந்து அந்த பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அங்குள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். 35 வயதான இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த செல்வம் தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். ஆனால் அப்போது கீழே அவர் பாட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்த 76 வயது சாரதா என்ற மூதாட்டி மீது விழுந்து விட்டார்.
செல்வம் மேலே வந்து விழுந்த வேகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் சாரதா. செல்வத்திற்கும் நல்ல அடி. இருவரும் உயிருக்குப் போராடினர். அந்தப் பகுதியே கூடி விட்டது. ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சாரதா பாட்டி பரிதாபமாக மரணமடைந்தார். செல்வம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்வம் மீது தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் உயிர் பிழைத்தால் கொலை வழக்கில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.