ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பிரச்சாரம் செய்யும் 60 தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் சலுகை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் கட்சித் தலைவர்களுக்கான பயணச்செலவில் தேர்தல் ஆணையம் சலுகை அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் கட்சித் தலைவர்களுக்கான பயணச்செலவில் தேர்தல் ஆணையம் சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, பெயர் கொடுக்கப்பட்ட தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மற்றும் வேறு வாகனங்களில் மேற்கொள்ளும் பயணத்துக்கான செலவு எதுவும் அந்தக்கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் விதிமுறைகள் ஏற்கனவே அமலுக்கு வந்த நிலையில் அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தலைவர்களின் பயணச்செலவில் சலுகை அளிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை மார்ச் 16-ந் தேதி வெளியாகிறது.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கும் கட்சிகளின் தலைவர்கள், பிரசார பயணச்செலவில் தேர்தல் விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த சலுகைகளைப் பெறுவதற்காக, 16-ந் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் அந்தத் தலைவர்களின் பெயர், இந்திய தேர்தல் கமிஷனிடமும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் கொடுக்கப்பட வேண்டும்.
அங்கீகாரம் பெறாத கட்சிகளின் தலைவர்கள் 20 பேருக்கும், அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் 40 பேருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, பெயர் கொடுக்கப்பட்ட தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மற்றும் வேறு வாகனங்களில் மேற்கொள்ளும் பயணத்துக்கான செலவு எதுவும் அந்தக்கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படாது.
அந்தக்கட்சித் தலைவரின் பயணச்செலவு தவிர, வேட்பாளரின் பிரசாரத்துக்காக அந்த கட்சி மேற்கொள்ளும் மற்ற செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். நட்சத்திர பேச்சாளர்களின் பயணத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.