என் புகாரின்பேரில்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் தள்ளிவைப்பு... சொல்கிறார் பாமக வேட்பாளர்
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தனது புகாரின் அடிப்படையிலேயே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக பாமக வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த தொகுதியின் பா.ம.க. வேட்பாளரான பாஸ்கரன் கூறுகையில், அரவக்குறிச்சி சட்ட சபைத் தொகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இணையதளம் மூலமாக புகார் மனு அனுப்பினேன்.
தேர்தல் விதி முறைகளை மீறி வேட்பாளர்கள் பணம் செலவு செய்துள்ளனர். எனவே அவர்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தேன். இந்த புகாரின் அடிப்படையிலேயே அரவக்குறிச்சிசட்டமன்ற தேர்தலை வருகிற 23-ந் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.
அரவக்குறிச்சியில் தனது புகாரை ஏற்றுக்கொண்டு, சோதனை செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரவக்குறிச்சியில் வாக்களர்களுக்கு ரூ. 1000 முதல் 2 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது இதே போல் தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் பணம் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும் .
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு 25-ந் தேதிக்கு அறிவிக்கப்பட உள்ளதால் அன்றைய தினமே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இடைத் தேர்தல் போல் ஆகிவிடும் என பாஸ்கரன் கூறினார்.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் கூறுகையில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து எந்தவிதமான பணமோ, பரிசு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.
தோல்வி பயம் காரணமாக திமுகவினர் தேர்தல் ஆணையத்தை தூண்டி விட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவை 25-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.