தேர்தல் விதிமீறல்- சேலம் கலெக்டரை மாற்ற தயங்க மாட்டோம்: தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சேலம் மாவட்ட கலெக்டரை மாற்ற தேர்தல் ஆணையம் தயங்காது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் சேலம் மாவட்ட கலெக்டர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்லபடுகிறார். அதனால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறி திமுக வேட்பாளர் மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
ஏற்காடு இடைத்தேர்தலில் முறைகேடு நடக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
இந்த தேர்தலை மேற்பார்வையிட வேறு மாநில அதிகாரிகள் இருவரை மேற்பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 290 வாக்குசாவடிகளையும் கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறும் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் சேலம் கலெக்டரை மாற்ற தேர்தல் கமிஷன் தயங்காது. இவரை மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கலெக்டருக்கு தேர்தல் கமிஷன் உரிய உத்தரவிட்டது. தேர்தல் நியாயமாக நேர்மையாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் எந்த நல திட்ட உதவிகளும் செய்யவில்லை.
அமைச்சர்கள் 10 காரில் சென்றனர் என்று மனுதாரர் கூறியுள்ளார். 6 கார் தான் போகலாம் என்று விதி உள்ளது. 3 கார்களாக தான் சென்றது. ஒவ்வொரு 3 காருக்கு இடையே 200 மீட்டர் இடைவெளியிருந்தது. எனவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்க மாறன் சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவகாசம் கேட்டதையடுத்து வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.