அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதாக காரணம்கூறி, தேர்தலை ஒத்திவைத்தது, தேர்தல் ஆணையம். இதன்படி வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 தினங்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி, இவ்விரு தொகுதிகளிலும் சொன்னபடி தேர்தல் நடைபெற ஏற்ற சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக உத்தரவிட்டார்.
இதனிடையே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று, பாமகவின் அரவக்குறிச்சி வேட்பாளர், பாஜகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் உள்பட 5 பேர், ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் தேர்தல் ஆணைய, பதிலை, ஹைகோர்ட் கேட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளை அவர்களின் அறையில் சந்தித்து, 23ம் தேதி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை வழக்கு நடைபெறும் கோர்ட் ஹாலில் வைத்து பகிரங்கமாக தெரிவிக்கும்படி வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்கப்போவதாக கூறியது. 3 வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வழக்குகள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20 ஆம் தேதிக்கு முன் முடிவடையும் என தமிழக தலைமை தேர்தல் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். முன்னதாக மே 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் மே 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.