தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் - திருமாவளவன்
தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் - திருமாவளவன்.
ஈரோடு: தமிழகத்தை இப்போது பாஜகதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திருமாவளவன் பேசுகையில், மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு எனக்கு அதிகமாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமண நிகழ்ச்சி மூலம் இங்கு வர இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. தமிழகத்தை இப்போது பாஜகதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.
இந்தியா முழுவதையும் நாம்தான் ஆள வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. தமிழகத்தை நாம்தான் ஆள வேண்டும். நமக்கு ஆள தகுதி இல்லையா என்ன? இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மேற்கு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்தி நமது கோட்டையாக மாற்ற வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.