சாலையைக் கடக்க யானைகள் முயற்சி: சென்னை- பெங்களூரு சாலையில் 3 மணி நேரம் “டிராபிக் ஜாம்”
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு சாலையைக் கடக்கப் போராடிய யானைகளுக்காக அந்நெடுஞ்சாலைப் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனச்சரகம் சானமாவு, போடூர்பள்ளம் காப்புக் காட்டில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டிருந்த இரு யானைகள் கடந்த மே 15 ஆம் தேதி இரவு கர்நாடக மாநிலம் மாலூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இப்பகுதியில் முகாமிட்டிருந்த போது சீத்தப்பா என்பவரைக் கொன்ற காட்டு யானைகள் கடந்த மே 17 ஆம் தேதி மீண்டும் ஒசூர் வனப்பகுதிக்கு திரும்பின.
காட்டிற்கு இடம்பெயர்வு:
கரியானப்பள்ளி வனப்பகுதியில் முதலில் முகாமிட்டிருந்த இரு காட்டு யானைகள் பின்னர் செட்டிப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து பேரண்டப்பள்ளி காப்புக் காட்டிற்குச் சென்றன.
சாலையக் கடக்க முயற்சி:
இந்த நிலையில் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளம் காட்டிற்கு வந்த 2 யானைகளும் நேற்று மாலை 5 மணியளவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்றுகொண்டு சாலையை கடக்க முயன்றன.
அச்சத்தில் ஆழ்ந்த வாகன ஓட்டிகள்:
சாலையோரம் யானைகள் நிற்பதைக்கண்ட வாகன ஓட்டுநர்கள் மிக மிக அச்சத்துடன் வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்றனர். யானைகளைப் பார்த்ததும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பலர் வாகனங்களை விட்டுவிட்டுத் திரும்பி ஓடி வந்தனர்.
வனத்துறையினர் வருகை:
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் ஒசூர் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத் துறையினர் பேரண்டப்பள்ளி பகுதிக்குச் சென்றனர்.
3 மணி நேரம் ”டிராபிக் ஜாம்”:
தேசிய நெடுஞ்சாலையோரப் புதருக்குள் நின்று கொண்டிருந்த யானைகளை போடூர்பள்ளம் நோக்கி விரட்ட மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 மணி நேரத்துக்கும் மேலாக வாகனப் போக்குவரத்தை நிறுத்தினர்.
திரும்பி வராத யானைகள்:
ஆனால், புதருக்குள் நின்ற யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு மீண்டும் திரும்பி வராததால் இரவு 8 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்கு வனத் துறையினர் அனுமதியளித்தனர்.
பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கை:
யானைகள் அங்கேயே நின்றிருப்பதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதுகாப்பாகச் செல்லுமாறு வனத் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
வழி ஏற்படுத்த முடிவு:
தவிர அந்த இரு யானைகளும் அடுத்து எந்தபகுதிக்கு செல்ல முடிவு செய்கிறது என்பதை பொறுத்து அதற்கு வழி ஏற்பாடு செய்துகொடுக்க முடிவு செய்துள்ளனர்.
மீண்டும் நிறுத்தப்படலாம்:
அதற்காக, யானைகள் சாலையைக் கடக்கும்போது பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்தை நிறுத்தவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அந்தப்பகுதியில், தங்கியுள்ள வனத்துறை அலுவலர்கள் அதற்கான ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.