தொடர்கதையாகும் யானைகள் மரணம்...: யானை பலியை தடுக்க மஹா கணபதி யாகம்
கோவை: கோவை அருகே வாளையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை உயிரிழந்தது. தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளன.
கோவை, சேலம், ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் மட்டும் இதுவரை 18 யானைகள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் யானைகள் இறப்பை தடுக்க பொதுமக்கள் சார்பில் மகா கணபதி யாகம் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள கோவை வனப்பகுதியில் ஆயிரத்திக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 20 நாட்களில் 5 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது. தொடர்ச்சியாக யானைகள் உயிரிழந்து வரும் சம்பவம் பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானைகள் நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது விபத்துகளில் சிக்கி காயமடையும் யானைகளுக்கு சிகிச்சையளிக்க தமிழகம் முழுவதும் ஒரு டாக்டரை மட்டுமே நம்பியிருக்கவேண்டியிருப்பதால் இந்த அவலநிலை நீடிக்கிறது.
குடியிருப்புகளுக்குள் யானைகள்
தமிழகத்தில் சமீபகாலமாக யானைகள்-மனித மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நீலகிரி, மாவட்டங்களில் வழித்தட ஆக்கிரமிப்புகளால் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகராஜ் யானை மரணம்
கடந்த இரு வாரங்களுக்கு முன் கோவை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற யானை இறந்தது. அதேபோல் குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக பிடித்து டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாராஜ் யானையும் இறந்தது.
தொடர் மரணங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி அருகே பேருந்து மோதி காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மக்னா யானை சிகிச்சைக்காக முதுமலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் போதிய சிகிச்சையின்றி அந்த யானையும் பரிதாபமாக இறந்தது.
ரயில் மோதி மரணம்
கோவை அருகே வாளையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை உயிரிழந்தது. தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 யானைகள் உயிரிழந்துள்ளன.
5 யானை மருத்துவர்கள்
விபத்து, நோய் வாய்ப்பட்டு பாதிக்கப்படும் யானைகள் மட்டுமின்றி காடுகளில் திரியும் பெரும்பாலான உயிரினங்களை பாதுகாப்பதற்கு கூட தமிழகத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை. வன விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென தமிழகத்தில் மொத்தம் 5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் மூன்று பேர் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றுகின்றனர்.
யானைகள் மரணம் அதிகரிப்பு
முதுமலை காப்பகத்தில் டாக்டர் விஜயராகவன் என்பவர் பணியில் உள்ளார். கோவை வன வட்டத்தில் பணியாற்றும் டாக்டர் என்.எஸ். மனோகரனை மட்டுமே நம்பி ஒட்டு மொத்த தமிழக வனத்துறையும் இயங்குகிறது. கோவையில் இருந்து அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்குள்ளாகவே பாதிக்கப்பட்ட விலங்குகள் உயிரிழப்பை சந்திக்கும் அவல நிலை தொடர்கிறது.
மருத்துவர்கள் நியமனம்
வனப்பாதுகாப்பு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு மருத்துவரை மட்டுமே நம்பி ஒட்டு மொத்த உயிரினங்களை பாதுகாப்பது சாத்தியமற்றது. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மகா கணபதி யாகம்
மேலும், யானைகள் உயிரிழக்காமல் இருக்க பொது மக்கள் சார்பாக கோவை ஆடீஸ் வீதியில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் 108 கொழுகட்டைகள் படைத்து சிறப்பு மகா கணபதி யாகம் நடத்தப்பட்டது. இதில் யானைகள் புகைப்படங்கள் வைத்து அதற்கு கரும்பு , வெல்லம், மற்றும் நவதானியங்களுடன் 108 ஹோம பொருட்கள் வைத்து பூஜை செய்தனர்.
யானைகள் நலம் பெறும்
தொடர்ந்து கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. யானைகளின் உயிரிழப்பை தடுக்க நடத்தப்பட்ட இந்த கூட்டு பிராத்தனையில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். யானைகள் இறப்பை தடுக்க இந்த யாகம் நடத்தப்பட்டதாகவும், இந்த யாகம் மூலம் யானைகள் நலம் பெறுமெனவும், யாகம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு நடவடிக்கை
யானைகள் தொடர்ச்சியாக இறப்பது மன வேதனை அளிப்பதாகவும், இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க சிறப்பு மகா கணபதி யாகம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். யானை உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாகம் நடத்தியவர்கள் வலியுறுத்தினர்.