நடிகர் மாதவனுக்கு நிலத்தை விற்பனை செய்ய கொடைக்கானல் விவசாயிகளை மிரட்டும் அதிகாரிகள்- பரபரப்பு புகார்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பாசன வாய்க்கால், புறம்போக்கு நிலத்தை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவருக்காக நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளே நெருக்கடி கொடுப்பதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைக்கு வத்தலகுண்டு வழியாகவும் பழனி வழியாகவும் செல்லும் இரு பிரதான பாதைகள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் அரசியல் பிரமுகர்கள், திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளனர்.
இதில் பழனி- கொடைக்கானல் மலைப் பகுதியில் நிலம் வாங்கியிருக்கும் நடிகர் மாதவன் மீது விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளான மகாலட்சுமி, கணேசன் ஆகியோர் பேசியதாவது:
விலாங்கோம்பை அடுத்துள்ள தேக்கந்தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையிலிருந்து பழனி பகுதியில் உள்ள கண்மாய்களுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் தேக்கந்தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள திரைப்பட நடிகர் மாதன், 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்ததுடன், மின்வேலியும் அமைத்துள்ளார்.
இதனால் விவசாயிகளின் பாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் விளைபொருள்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த களம் மற்றும் புறம்போக்கு நிலங்களையும் அவர் ஆக்கிரமித்துள்ளார்.
நடிகர் மாதவனுக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்படுகின்றனர். அத்துடன் எங்கள் நிலங்களை விற்பனை செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தும் வருகின்றனர். இதனால் நடிகர் மாதவன் மீதும் அவருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உத்தரவிட்டார்.