கோவை தனியார் என்ஜீனியர் கல்லூரி மாணவர்கள் அடிதடி: படுகாயமடைந்த மாணவர் மரணம்
கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட என்ஜீனியரிங் கல்லுாரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், படுகாயமடைந்த மாணவர், நேற்று பலியானார். இது தொடர்பாக, மாணவர்கள் ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் கற்பகம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு உட்பட்ட என்ஜீனியரிங் கல்லுாரியில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், ஆர்.புதுப்பட்டி, பெரியமுனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் பாலுசாமி மகன் கார்த்திகேயன், கல்லுாரி விடுதியில் தங்கி பி.இ., மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்தார்.
கார்த்திகேயனும், அதே கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும், நண்பர்களும், கடந்த சில தினங்களுக்கு முன் மதியம், ஓட்டல் முன் நின்றிருந்தனர். அப்போது, அதே கல்லுாரியில் படிக்கும் சத்யநாராயணனுடன் தகராறு ஏற்பட்டது. இருவரும் அடித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு இவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது சத்யநாராயணன், தனது நண்பர்களுடன் சென்று சரமாரியாக கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக்கேயனை அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மற்ற மாணவர்கள், அடிபட்ட மாணவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிர்ச்சியுற்ற நுாற்றுக்கணக்கான மாணவர்கள், அரசு மருத்துவமனையில் திரண்டனர். சடலத்தை பார்த்த, கார்த்திகேயனின் பெற்றோர், கண்ணீர் விட்டு கதறினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு, சடலத்தை வாங்க மறுத்து, பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம், போலீஸ் அதிகாரிகளும், கல்லுாரி நிர்வாகத்தினரும் சமரச பேச்சு நடத்தினர்.
மாணவர் மோதல் சம்பவம் தொடர்பாக சரவணன், வெற்றி, தர்மராஜ், அருள்பாண்டி, சத்தியமூர்த்தி, நவீன்குமார், சிவபிரகாஷ், அரவிந்த்குமார் ஆகியோரை மதுக்கரை போலீஸார் கைது செய்தனர்
கார்த்திக்கேயன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொலை வழக்காகப் பதிவு செய்து, மதுக்கரை போலீசார் 8 மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களிடையேயான மோதல் ஒரு மாணவனின் உயிரை பறித்த சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.