அதிருப்தி அமைச்சர்களை சமாதானப்படுத்த எடப்பாடியார் மும்முரம்- பொதுக்குழு குறித்தும் ஆலோசனை!
சென்னை: தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிருப்தி அமைச்சர்களை சமாதானப்படுத்துவதிலும் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் உள்ளிட்ட எடப்பாடி தரப்பினரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அடுத்தடுத்து அறிவித்து வருகிறார் தினகரன். இன்னொரு பக்கம் சசிகலாவை நீக்குவது அல்லது தகுதி நீக்க அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடச் செய்வது என்பதில் எடப்பாடி தரப்பு மும்முரமாக இருக்கிறது.
அமைச்சர்களுக்கு உத்தரவு
இந்த நிலையில் அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடியார் அறிவுறுத்தியுள்ளார். தினகரன் சொல்வதைப் போல எடப்பாடி அணியில் ஸ்லீப்பர் செல்களாக குறைந்தது 5 அமைச்சர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
அதிருப்தி அமைச்சர்கள்
இவர்கள் அல்லாமல் அமைச்சரவை மாற்றத்தால் சில அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் கணிசமான எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர்.
சமாதானப்படுத்தும் முயற்சி
ஆகையால் முதல் நடவடிக்கையாக ஸ்லீப்பர் செல்கள், அதிருப்தி அமைச்சர்கள் ஆகியோரை சமாதானப்படுத்தி தக்க வைக்கும் முயற்சிகளை எடப்பாடியார் தரப்பு மேற்கொள்கிறது. இதற்காகவே அமைச்சர்களை நாளை சென்னையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனராம்.
பொதுக்குழு கூட்டம்
அத்துடன் சசிகலாவை நீக்குவது தொடர்பாகவும் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் நாளைய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இருப்பினும் ஸ்லீப்பர் செல்களும், அதிருப்தி அமைச்சர்களும் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்கிற சந்தேகமும் எடப்பாடியார் தரப்பில் இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.