பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஈபிஎஸ் அணியினர் எங்களை 'காலி செய்ய' பார்க்கிறார்கள்.. மதுசூதனன் திடுக்!
ஈபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தங்களை காலி செய்யப் பார்ப்பதாக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஈபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தங்களை காலி செய்யப் பார்ப்பதாக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு கோஷ்டிகளாக உடைந்தது. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி சிறைக்கு செல்லவே, கட்சி டிடிவி தினகரன் வசம் ஆனது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனும் திகார் சிறையில் அடைக்கப்பட தற்போது அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
ஆர்வம் காட்டும் ஈபிஎஸ் அணி
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் அதனை பெற ஓபிஎஸ் அணியினர் தீயா வேலை செய்து வருகின்றனர். இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக ஈபிஎஸ் கோஷ்டியும் ஓபிஎஸ் கோஷ்டியுடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறது.
பேச்சுவார்த்தையில் இழுபறி
இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. இதனை ஏற்க ஈபிஎஸ் அணி மறுப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவி வருகிறது.
அமைச்சர்களின் துடுக்குத்தனம்
இதனிடைய ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவ்வப்போது துடுக்குத்தனமாக பேசி வருவதும் இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதானல் இரு அணிகளும் இணைவது கேள்விக்குறியாகியுள்ளது.
காலி செய்யப் பார்க்கிறார்கள்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஈபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்களை காலி செய்ய பார்க்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
இருவரையும் நீக்க வேண்டும்
ஈபிஎஸ் அணியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்றும் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
விசுவாசமாக இருக்கும் நாஞ்சில்
மேலும் நாஞ்சில் சம்பத் சசிகலாவிடம் பெற்ற பணத்திற்கு விசுவாசமாக இருக்கிறார் மதுசூதனன் என்றும் மதுசூதனன் கூறியுள்ளார். ஏற்கனவே இழுபறி நிலவி வரும் நிலையில் மதுசூதனனின் இந்த புதிய நிபந்தனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.