ஆபத்து காலத்தில் அணி மாறுவது துரோகம்: எம்எல்ஏக்களுக்கு ஈபிஎஸ் குட்டிக்கதை
அதிமுக தொண்டர்கள் தியாக உணர்வுடனும், விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் 3 அணிகள் உள்ளதால் தொண்டர்கள், எம்எல்ஏக்கள் அடிக்கடி அணி மாறி வருகின்றனர். இதற்காகவே ஒரு கதை சொல்லியுள்ளார்
அதிமுக இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணி என அதிகாரப்பூர்வமாக பிளவுபட்டுள்ளது. எந்த எம்எல்ஏக்கள் எப்போது யார் பக்கம் தாவுவார்களோ என்ற அச்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பெரம்பலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சிக்கு தொண்டர்கள், எம்எல்ஏக்கள் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் ஒரு கதை சொன்னார்.
ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும் தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
இதைக் கண்ட கடவுள், சிட்டுக்குருவியிடம், உனது சின்னஞ்சிறிய அலகால் தண்ணீரை எடுத்து வந்து எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும் எனக் கேட்டார்.
அதற்கு அந்தக் குருவியோ... நான் பிறந்து வளர்ந்து வாழ உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம். என்னால் ஆனதைச் செய்து இந்தக் காட்டை காப்பாற்ற முயல்கிறேன் என்று பதில் கூறியது.
அந்தக் குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் கண்டு மகிழ்ந்த கடவுள், உடனே காட்டுத் தீயை அணைத்து வனத்தை காப்பாற்றினார். அந்தச் சிட்டுக்குருவிபோல அதிமுக தொண்டர்கள் தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும்'' என்றார்.
அதாவது, இந்த அணியைவிட்டு வேறு அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கதையை அவர் சூசகமாகச் சொல்லி முடித்தார்.
இந்த கதை யாருக்கு புரிந்ததோ இல்லையோ, எம்எல்ஏக்களுக்கு புரிந்தால் சரிதான் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.