ஈரோட்டில் கோட்சேவுக்கு சிலை.... மே 17ம் தேதி திறப்போம்.. இந்து மகா சபை அறிவிப்பு!
கரூர்: ஈரோட்டில் வரும் மே மாதம் 17 ம் தேதியன்று கோட்சேவுக்கு சிலை நிறுவப்படும் என்று அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கூறியுள்ளார்.
கரூர் வந்த ராஜசேகர், பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தொண்டர்கள் புடை சூழ அவர் பேசுகையில்,
இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருடத்திற்கு ரூ 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இருப்பினும் அறநிலையத் துறை அதன் பணியை சரியாக செய்வதில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துக்களை மீட்டுக் கொடுக்க போராட்டம் நடத்தினோம். மீண்டும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். ஆதலால் தமிழக அரசு எங்களது கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கையில் எடுத்து அக்காரியங்களை செய்வோம்.
திராவிடர் கழகம், இந்து விரோத போக்கினை தொடர்ந்து செய்து வருகிறது. தாலி அறுப்பு போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என்று மாவட்டம் தோறும் செயல்படுத்தி வருகிறது. திராவிடர் கழகத்தினை தமிழக அரசு கண்டிப்பதோடு, தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் வீரமணியை கைது செய்ய வேண்டும்.
வருகின்ற மே மாதம் 17 ம் தேதி கோட்சே சிலையை ஈரோட்டில் வைக்க உள்ளோம். இது எங்களது உரிமை. உயர் நீதிமன்றமே 1966 ல் கூறி இருக்கிறது. கோட்சேவின் சிந்தனைகளையும், சித்தாங்களையும் வெளிக்கொணர்வதில் எந்த தடையும் இல்லை என்று கூறி உள்ளது. ஆதலால் கண்டிப்பாக அவரது சிலையை நிலை நிறுத்துவோம் என்றார் அவர்.