படுகொலை செய்யப்பட்ட திவிக தொண்டர் பாரூக் குழந்தைகளின் படிப்பை ஏற்கிறது எவிடென்ஸ்
மதங்களை எதிர்த்து மனிதம் பேசிய பாரூக் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு குழந்தைகளுக்கான கல்வி செலவுகளை எவிடென்ஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கோவை: திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாரூக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து மனிதங்களை இணைக்க முயற்சித்தார். இதுவே அவர் உயிரைக் குடித்துவிட்டது.
கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார்.
வெறிச் செயல்
இதனையடுத்து, தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.
பரிதாப பலி
ரத்த வெள்ளத்தில் மிதந்த பரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு காரணம்?
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த பாரூக்கை திவிக தலைவர் கொளத்தூர் மணி தீவிர முயற்சி செய்து அவரை வெளியே எடுத்துள்ளார். தான் வெளியே வருவதற்கு உறுதுணையாய் இருந்த திவிக அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட பாரூக், தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிரத்தன்மைதான் அவரை பலி வாங்கி விட்டதாக திவிகவினர் தெரிவிக்கின்றனர்.
இருவர் சரண்
இதனிடையே, போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சாத் என்பவர் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை வருகின்ற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். இதனையடுத்து, போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கொலையில் 6 பேர்..
இந்நிலையில், "என் மகனை ஒரு ஆள் அல்ல.. ஐந்தாறு பேர் சேர்ந்து கொலை செய்து இருக்கின்றனர். இந்த விஷயம் போலிஸுக்கு தெரியும். ஆனால் பிரச்சனை வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்" என்று பாரூக்கின் அப்பாவும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் கல்வி
இளம் வயதில் படுகொலையான பாரூக்கிற்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தகப்பன் மறைவினால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க எவிடென்ஸ் என்ற அமைப்பு குழந்தைகளின் அனைத்து கல்வி செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் எவிடென்ஸ் கதிர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று எவிடென்ஸ் கதிர் உறுதியளித்துள்ளது பாரூக்கின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.