கடிதம் எழுதுவதை விட்டு விட்டு மோடியை நேரில் சந்திக்க வேண்டும் ஓ.பி.எஸ். - இளங்கோவன்
கரூர்: தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதுவதை தவிர்த்து அவரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான உரங்களைப் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முயல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
கரூரில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் அரங்கில் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசு, திருச்சி வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ இராமநாதன், கட்சியின் மகளிரணியினர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தன் மாநில உரிமைகளை பெறுவதற்கு டெல்லி வரை அழைத்து சென்று பிரதமரிடம் பேசுகிறார்.
அதேபோல தமிழகத்தின் நலன் காக்க தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் கடிதம் எழுதுவதை தவிர்த்து பிரதமரை நேரிடையாக சந்தித்து தமிழகத்திற்கு தேவையான உரங்களை தமிழக முதல்வர் பெற வேண்டும் என்றார் இளங்கோவன்.