கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் கிரண்பேடி.. ஈவிகேஎஸ் இளங்கோவன் தடாலடி
கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே டெல்லியில் முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற மோதல் போன்றே புதுவையிலும் பிரச்சனை தொடங்கியது.
பிரச்சனை முற்றிய நிலையில், அன்றாட நிர்வாக செயல்பாடுகளிலும் அது வெளிப்படையாக தெரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாராயணசாமி கூட்டினார். இதனால் கடுப்பான கிரண்பேடி நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட முடியாது என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சென்று சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டிய கிரண்பேடி புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக வந்துள்ளார் என்று கிண்டலடித்தார்.
பின்னர், புதுவை முதல்வர் நாராயணசாமி ஒன்றும் செய்ய முடியாது என்றும் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார்.