வைகோவிடம் எடப்பாடி பழனிச்சாமி கவனமாக இருக்க வேண்டும்.. ஈவிகேஎஸ் அட்வைஸ்
திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
சென்னை: ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக பேசும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவரை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் சரியான நடவடிக்கை எடுக்கு வேண்டுமென்றால், சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும். அது ஒன்று தான் தீர்வாக இருக்கும். ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக பேசும் வைகோவிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.