"110" அறிக்கை போல் இருக்கக் கூடாது சிவாஜி கணேசன் மணிமண்டபம் அறிவிப்பு... ஈவிகேஎஸ்.இளங்கோவன்
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு 110 அறிக்கை போன்று இருந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
நடிப்பில் இமயம் போல் உயர்ந்து 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்களை ஏற்று உணர்ச்சிப்பூர்வமாக நடித்து, மக்களிடையே தேசபக்தியை வளர்த்து நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழக அரசால் 2002 இல் 65 சென்ட் நிலம் வழங்கப்பட்டு, இதுவரை அப்பணி நிறைவேறாதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி வந்தது. தற்போது அரசே கட்டும் என்று அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
ஆனால், சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் வாசிக்கிற அறிவிப்புகளைப் போல இந்த அறிவிப்பும் செயலுக்கு வரலாமல் இருக்காது என நம்புகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்திய சிவாஜி சமூகநல பேரவைத் தலைவர் சந்திரசேகர் அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்'
இவ்வாறு தனது அறிக்கையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.