மாட்டுக்கறி சாப்பிட உரிமை இருக்கு; தாலி வேணாங்கிறது தவறில்லையே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'பொளேர்'!
சென்னை: மாட்டுக்கறி ஏழைகளின் உணவு.. அதை சாப்பிட அனைவருக்கும் உரிமை இருக்கு; அதேபோல் தாலியை சில பெண்கள்தான் அணிகிறார்கள்.. அதை வேண்டாம் என்று சொல்லுவதில் தவறேதும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அண்மையில் தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் 'மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்; தாலி அகற்றுதல்" ஆகிய நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடத்துவதாகவும் அறிவித்துள்ளன. தமிழகத்தில் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த இரு விவகாரங்கள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
மாட்டுக்கறி என்பது ஏழைகளின் உணவு. அதை சாப்பிடக் கூடாது.. விற்கக் கூடாது என தடை விதிப்பது ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.
ஏனென்றால் இன்று ஆட்டுக்கறி கிலோ ஒன்றுக்கு ரூ500க்கு விற்பனையாகிறது.. கோழி அதை விட சற்று குறைவாக விற்கிறது.. மாட்டுக் கறி அதைவிட மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.. அதனால் அதை சாப்பிடுகிறார்கள்..
மாட்டுக்கறியின் ருசி பிடித்தவர்கள் அதை சாப்பிடுகிறார்கள். மாட்டுக்கறியை நன்கு ருசியாக செய்திருந்தால் நானும் சாப்பிடுவேன்.. சாப்பிட்டும் இருக்கிறேன்.
திடீர்னு அரிசி சாப்பிடக் கூடாது என்று சொன்னால் எவ்வளவு மோசம்? கோதுமை சாப்பிடக் கூடாது என்று சொன்னால் எவ்வளவு மோசம்?. ஆடு, மாடு மாதிரி மக்களும் புல் பூண்டு போன்றவற்றை மட்டும் உண்ணவா முடியும்?
உங்களுக்கான உணவை உண்ண உங்களுக்கு உரிமை இருக்கிறது.. பாம்பை உணவாக சாப்பிடுகிறவர்கள் சீனாவில் இருக்கிறார்களே. ஆகையால் மாட்டுக்கறியை தடை செய்வோம் என்று சொல்வது முழுமையாக மோசமான செயல்.
தாலி விவகாரம்
மற்றொன்று உலகத்தில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சில பெண்கள்தான் தாலி அணிகிற வழக்கம் இருக்கிறது. ஆகையால் தாலி கட்டுவது அவசியமா? இல்லையா என்பதில் விவாதம் நடத்துவதில் தவறேதும் இல்லை.
உலகத்தில் இருக்கிற பெரும்பான்மையான பெண்கள் தாலி கட்டுவதில்லை. சிலர் மோதிரம் அணிகின்றனர்.. சிலர் தங்கச் செயின் அணிகின்றனர்.. தாலி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மிகவும் தவறு.. தாலி அணியக் கூடாது என்று கட்டாயப்படுத்துவதும் தவறு.
தாலி கட்டுவதும், கட்டாததும் ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது. தாலி வேண்டாம் என்று சொல்வதெல்லாம் தவறு என சொல்ல முடியாது. சுயமரியாதை திருமணங்களில் தாலி கிடையாது. இதற்காக தாலி குறித்து விவாதம் நடத்துகிற தொலைக்காட்சிகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.