பூணூலை வன்முறையால் அறுத்தது கடும் கண்டனத்துக்குரியது... இளங்கோவன்
சென்னை: சென்னையில் வயது முதிர்ந்த முதியவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது அதிர்ச்சி தருகிறது என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், முதியவர் ஒருவரை தாக்கி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதேபோல மற்றொரு சம்பவம் மேற்கு மாம்பலத்திலும் நடைபெற்றிருக்கிறது.
புகார் கொடுத்ததின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடுமையாக கண்டிக்க விரும்புகிறேன்.
ஒருவர் தாலி அணிவதும், அணிய மறுப்பதும் எப்படி தனி மனித உரிமையாகுமோ, அதேபோல பூணூல் அணிவதும், அணியாததும் அவரவர் தனிமனித உரிமையாகும். அந்த உரிமையை மறுக்கிற வகையில் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சாடியுள்ளார் இளங்கோவன்.