ஐஜி அலுவலகத்தில் ஆட்டோ சங்கர், வீரப்பன் படங்களையும் வைப்பீர்களா?.. இளங்கோவன் நக்கல்!
காவல் துறை தலைவர் அலுவலகத்தில் ஆட்டோ சங்கர், வீரப்பன் ஆகியோரது படங்களையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு: ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் வைத்தால், காவல் துறை தலைவர் அலுவலகத்தில் ஆட்டோ சங்கர், வீரப்பன் ஆகியோரது படங்களையும் வைக்க கோரிக்கை வரும் பாருங்க என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக வளச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என்று மிகப் பெரிய தலைவர்களின் படங்களை வைத்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது சட்டவிரோதமானது. குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பது தவறான முன்னுதாரணமாகும்.
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைத்தால், காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வரும். அதை இப்போதே தவிர்க்க வேண்டும்.
மெரீனா கடற்கரையில் எம்ஜிார் சமாதி வளாகத்தில் ஜெயலலிதாவின் சமாதி இருக்கிறது. அங்கு அவரது உடல் வைக்கப்பட்டதே முதலில் தவறு. இந்நிலையில் அரசு பணத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதை தவிர்க்க வேண்டும். தமிழக சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதா உருவப்படத்தை வைக்கக்கூடாது என்றார் அவர்.