சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு 'புதிய வியூகம்' வகுப்போம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக புதிய வியூகம் வகுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர், செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இளங்கோவன் கூறியதாவது:
மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்தக்கோரி 2-ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நீண்ட நெடிய பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.
கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கி செல்கிறார். மேலும் அன்றைய தினம் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகவும், மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த கோரியும் மாநிலம் முழுவதும் வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகஅளவு படுகொலைகள்தான் நடந்துள்ளது. சமீபத்தில் சேஷசமுத்திரத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன. இதனை கண்டித்து வருகிற 9-ந்தேதி செல்வபெருந்தகை தலைமையில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகம் தொழில் வளர்ச்சியில் 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதை மூடிமறைக்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்ய ரூ.100 கோடி செலவிடுவதாக அறிவித்து உள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறேன். ஆனால் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலையை அகற்றும் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதில் காங்கிரஸ் கட்சியின் பங்கு இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர்ந்து உள்ளன. இதனால் காங்கிரசுடன் அரசியல் ரீதியாக உறவு கொள்ளும் புதிய போக்கு ஏற்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் வியூகம் வகுக்கப்படும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.