தேர்தல் தோல்வி... ராகுல் அதிருப்தி.. தமிழக காங். தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்விக்கு இளங்கோவன் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலரும் டெல்லி சென்று மாநிலத் தலைவர் என்ற முறையில் இளங்கோவன் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
கட்சிக்குள் போர்க்கொடி
செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், தனது தோல்விக்கு இளங்கோவனே காரணம். எனவே, மேலிடம் நீக்கும் வரை காத்திருக்காமல் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் இளங்கோவன்.
நிர்வாகிகள் நீக்கம்
தோல்வி அடைந்த வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தனது ஆதரவாளர்கள் 5 பேர் உட்பட 7 மாவட்டத் தலைவர்களை பொறுப்பிலிருந்து இளங்கோவன் நீக்கினார்.
மாஜி அமைச்சர்கள் புகார்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி என பலரும் இளங்கோவனை மாற்ற வேண்டும் என மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்
கடந்த வாரம் ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று ராகுல்காந்தியிடம் தோல்விக்கான காரணங்களை விளக்கினாராம். பணபலத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினால் போட்டி போட முடியவில்லை என்று தெரிவித்தாராம்.
ராகுல்காந்தி அதிருப்தி
ஈவிகேஎஸ் இளங்கோவனின் விளக்கத்தை ஏற்காத ராகுல் காந்தி, திமுக கூட்டணியில் மேலும் அதிக இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். சரியான வேட்பாளர்களை நிறுத்தி 30 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இளங்கோவன் ஏமாற்றம்
ராகுல் காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியை சந்திப்பதற்காக 3 நாட்கள் இளங்கோவன் டெல்லியில் காத்திருந்தார். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய அவர், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று சத்தியமூர்த்தி பவன் வருகை தந்தார்.
ராஜினாமா முடிவு
இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி திரும்பியதும், ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுப்பார் என சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
17ம் தேதியே இளங்கோவன் ராஜினாமா கடிதம் அனுப்பி விட்டதா தகவல்கள் கூறுகின்றன. தற்போதுஅடுத்த தலைவர் யார் என்ற பரபரப்பு காங்கிரஸ் கட்சியை தொற்றிக் கொண்டுள்ளது.