ஜெ. சமாதியிலேயே இந்த அடி.. உயிரோடு இருந்தபோது எப்படி அடித்திருப்பார்கள்.. இளங்கோவன்
ஜெயலலிதாவின் சமாதியிலேயே இந்த அடி அடித்தவர்கள் உயிரோடு இருந்தபோது எப்படி அடித்திருப்பார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுள்ளார்.
ஈரோடு: கல்லறையில் அவர் அடித்த அடியைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். அடித்தே ஜெயலலிதாவைக் கொன்று விட்டனர் என்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசினார். அப்போது சசிகலாவின் கல்லறை சபதம் குறித்து கருத்து தெரிவித்தார்.
மக்களை ஏமாற்ற நினைத்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இளங்கோவன் பேச்சிலிருந்து:
தவறு செய்தால் சிறைதான்
தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும் தட்டிக்கேட்க ஆள்இல்லை என்றுசெயல்பட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தனர். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைஉள்ளது.
மக்களை ஏமாற்ற முடியாது
எதை வேண்டுமானாலும் செய்யலாம் மக்களை ஏமாற்றலாம் என நினைப்பவர்களுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது. இது ஒரு திருப்புமுனை ஆகும்.
முந்தானையில் முடிய முடியுமா
தமிழகத்தை முந்தானையில் முடிந்து விட நினைத்தார்கள். ஆனால் சிறைக்குத்தான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது.
இந்த அடி அடித்தவர்கள்
கல்லறைக்கு சென்று சமாதியில் இந்த அடி அடித்தவர்கள் அவர் உயிரோடு இருக்கும்போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அடித்தே கொன்று விட்டனர் என மக்கள் பேசுகின்றனர்.
மக்கள் சிந்திக்க வேண்டும்
மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமாதியிலேயே இந்த அடி விழுகிறது என்றால் நிச்சயம் அடி வாங்கியவர் உயிரோடு இருந்திருக்க முடியாது என்றே கருத வேண்டியுள்ளது என்றார் இளங்கோவன்.