தலித் நிர்வாகிகளை இழிவாக பேசினார்.... காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி மீது 'வன்கொடுமை' வழக்கு!!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலித் நிர்வாகிகளை மிக இழிவாக பேசியதாக அக்கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் விஜயதாரணி. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் அவரது ஆதரவாளர்கள் வைத்த பேனரை மற்றொரு தரப்பு கிழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று முன்தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனிடம் விஜயதாரணி புகார் தெரிவிக்க சென்றார். ஆனால் திடீரென இளங்கோவனோ தம்மை பற்றி கேவலமாக பேசினார்; அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் வெளியேற்றும் வரை ஓயப் போவதில்லை என விஜயதாரணி கலகக் குரல் எழுப்பினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கும் அவர் கடிதம் அனுப்பினார். பின்னர் விஜயதாரணியை இழிவாகப் பேசியதாக இளங்கோவன், அவரது ஆதரவாளர்கள் திரவியம், பொன். பாண்டியன், பிரான்லின் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே விஜயதாரணி மீது மனோகரி என்ற காங்கிரஸ் நிர்வாகி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தலித் நிர்வாகிகளை விஜயதாரணி இழிவாகப் பேசுகிறார்.. ஆகையால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் போலீசிடம் முறையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரி, சோனியா ராகுல் காந்தி ஆகியோர் தலித்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் விஜயதாரணியோ ஜாதியை அவமானப்படுத்தி எங்களை கேவலப்படுத்துகிறார்கள். மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு விஜயதாரணிக்கு தகுதியே கிடையாது. நான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்கிறார். மேலும் சில வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்னை அடிக்க பாய்ந்தார். சாகடித்துப் போட்டுவேன் என்று மிரட்டினார். பொதுவாக சாதியை பற்றி பேசக் கூடாது. அவர்கள் சாதியைப் பற்றி பேசியதால் புகார் செய்தேன் என்றார்.
தற்போது விஜயதாரணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பேனர் விவகாரம் பிரளயமாக வெடித்துள்ளதே...