காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது: இளங்கோவன் உறுதி
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற திமுகவினர் முழுமூச்சுடன் உழைக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தேர்தலில் தோல்வி ஏற்படும்போது பலவிதமான விமர்சனங்கள் வரும்.
தேர்தல் தோல்விக்கு ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவது சரியல்ல. தோல்விக்கு இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள அனைவரும் தேசியவாதிகள். நாட்டு நலனில் அக்கறை கொண்ட அவர்கள் எதற்காகவும் காங்கிரஸை விட்டுச் செல்ல மாட்டார்கள். அவர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தாலும் 89 எம்.எல்.ஏ.க்களுடன் பலமிக்க எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. 3-வது பெரிய கட்சியாக காங்கிஸ் உருவெடுத்துள்ளது. தமிழக சட்டசபையில் மக்களின் பிரச்னைக்காக திமுக.,வுடன் இணைந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று ஆவின் பால் விலையை ஜெயலலிதா உடனடியாக குறைக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியானது அல்ல. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.