ஒரே விமானத்தில் டெல்லி போன குஷ்பு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.. டெல்லியில் பிரசாரம் செய்ய!
சென்னை: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ய நடிகை குஷ்பு இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் டெல்லி சென்றார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக இன்று காலை 6.40 மணிக்கு இருவரும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருவரும் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். டெல்லி புறநகர் பகுதிகளான ஆர்.கே.புரம், நொய்டா ஆகிய இடங்களில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். குறிப்பாக தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்கள். திறந்த ஜீப்பில் வீதி வீதியாக செல்கிறார்கள். மாலையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள். நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 2 நாட்கள் பிரசாரத்தை முடித்துவிட்டு 3 ம் தேதி, சென்னை திரும்புகிறார்கள்.
இந்த டெல்லி பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இளங்கோவன் சந்திக்கிறார். அப்போது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இருவரிடமும் இளங்கோவன் நேரில் விளக்கம் தருகிறார்.