ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு முன்னாள் எம்எல்ஏ.. கார்த்திக் தொண்டைமான் நேரில் சந்தித்து ஆதரவு
ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு முன்னாள் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்தள்ளார். இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்த கார்த்திக் தொண்டைமான் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுக சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் இரண்டாக பிளந்தது.
சசிகலாவின் தலைமையை பிடிக்காத பல முன்னாள் இன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தலைவர்கள் ஓபிஎஸ்ஸை தேடி வந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழல் தற்போது உருவாகி அதற்கான பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற நிலையில், இன்று முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த கார்த்திக் தொண்டைமான் தன்னை அந்த அணியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஓபிஎஸ் தலைமையை ஏற்று கட்சிப் பணியை தொடர்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சியோடு இங்கு வருகை தந்துள்ளோம் என்று கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் ஓபிஎஸ் அணியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.