லஞ்சப் புகாரில் சிக்கிய கலால்துறை பெண் கமிஷ்னர் ஜானகி அருண்குமார் கைது
லஞ்சப் புகாரில் சிக்கிய கலால்துறை பெண் கமிஷ்னர் ஜானகி அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய சுங்கம் மற்றும் கலால்துறை உயர் அதிகாரி ஜானகி அருண்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையாளராக பணியாற்றி வந்தவர் ஜானகி அருண்குமார். இவர் சுங்கத்துறையில் பணி மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. மேலும் ஜானகி அருண் குமார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதன்பேரில் கடந்த 6 மாதங்களாக சிபிஐ போலீசார் ஜானகியின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.
ஒரு அதிகாரியின் பணி மாறுதலுக்கு ரூ 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் சிபிஐ அதிகாரிகள் கொடுத்தனுப்பிய லஞ்சப் பணத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரி நேற்று முன்தினம் இரவு ஜானகியிடம் அவரது பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஜானகியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து ஜானகி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.