காலாவதியான ஆவின் பொருட்கள் விற்பனை.. சேலத்தில் பொதுமக்கள் பகீர்
காலாவதியான ஆவின் பொருட்கள் சேலத்தில் விற்கப்படுவதாக பொதுமக்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம்: சேலத்தில் காலாவதியான ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, அதிகாரிகள் பால் விற்பனையகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சேலத்தை அடுத்த பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பசுவநத்தம்பட்டி பால் உற்பத்தி மையத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. அங்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் குளிர்பானத்தை வாங்கிக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து பால் விற்பனை மையத்தை நேற்று முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டம் நீடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், அந்த பால் உற்பத்தி மையத்திற்கு சென்ற ஆவின் நிறுவன அதிகாரிகள், அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர். தமிழகத்தில் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள்தான் கலப்படம் செய்து பால் பொருட்களை விற்கின்றன என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருந்தார்.
இந்த நிலையில், சேலத்தில் தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருட்கள் விற்கப்படுகின்றன என்று புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.