தங்கை திருமணத்திற்காக மனைவி நகையை விற்ற கணவர்.. காதையும் கடித்து துப்பினார்.. திருச்சி அருகே ஷாக்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணத்தின்போது தான்கொண்டு வந்த சீர் குறித்து மனைவி கேள்வி எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரது காதை கடித்து துப்பினார்.
லால்குடி: லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டை முத்தியூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பூமிபாலன். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நவமணியை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
திருமணத்தின்போது நவமணிக்கு, அவருடைய வீட்டில் கொடுத்த நகை மற்றும் பணத்தை பூமிபாலன் அவருடைய சகோதரியின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டாராம்.
இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பூமிபாலன் நவமணியை தாக்கியதோடு, அவரது காதையும் கடித்து துப்பியுள்ளார். இது தொடர்பாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் அடிப்படையில் லால்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பூமிபாலனையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவருடைய தாயார் செண்பகவள்ளியையும் (65) போலீஸார் கைது செய்தனர்.