பாலாற்று தடுப்பணையில் தமிழக விவசாயி தற்கொலை... ஆந்திரா ரூ.50 லட்சம் வழங்க வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: ஆந்திரா அரசின் அடாவடியால் தமிழக விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்திருக்கிறார். விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
புல்லூர் தடுப்பணையின் உயரத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து என் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தான் முதன் முதலாக போராட்டத்தை நடத்தினோம். ஆனாலும் ஆந்திரா அரசு தமிழகத்தின் எதிர்ப்பை மீறி தடுப்பணையின் உயரத்தை அதிகரித்துள்ளது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த நடவடிக்கையுடன் நின்றுவிடாமல் ஆந்திரா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை கைவிடச் செய்திருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் தற்போது பள்ளத்தூர் சீனிவாசன் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து விட்டார்களே என்ற வேதனையில் அதே தடுப்பணையில் குதித்து தமது உயிரை மாய்த்திருக்கமாட்டார்.
அதுவும் பாலாற்றில் 12 அடி வரை நீர் நிரம்பியிருந்தும் இந்த தடுப்பணை உயர்த்தப்பட்டு விட்டதால் விவசாயத்துக்கு நீர் இல்லாமல் போகிறதே என்ற வேதனையுடன் மேற்கு பக்கமாக திரும்பி சூரியன் மறைவதைப் பார்த்து இரு கை கூப்பி வணங்கியபடி தடுப்பணையில் குதித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இது விவசாயி சீனிவாசனின் துயரம் அல்ல.. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேதனையின் வெளிப்பாடுதான் சீனிவாசனின் உயிர் தற்கொடையாகும்.
இப்படியான ஒருநிலைக்கு தமிழக விவசாயிகளை தள்ளிய ஆந்திரா அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து சிறிதுகூட கவலைப்படாமல் மத்திய அரசும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆந்திரா அரசு உடனே புல்லூர் தடுப்பணையின் உயரத்தை 5 அடியாக குறைப்பதுதான் சீனிவாசனின் உயிர்கொடைக்கான உரிய மரியாதையாகும். இல்லையெனில் தமிழக விவசாயிகளே அந்த தடுப்பணையை தகர்க்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.
தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.