இனி பாம்புக்கறிதான் தின்னனும் போல.. தமிழக அரசின் அறிவிப்பிற்கு அய்யாக்கண்ணு அதிருப்தி
வறட்சி மாநிலமாக தமிழக அரசு அறிவித்தாலும், நிவாரணங்கள் போதிய அளவு இல்லை என்று அய்யாகண்ணு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: காய்ந்த பயிர்களுக்கு போதிய இழப்பீட்டை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இதுவரை எலிக்கறியை சாப்பிட்டு வந்த விவசாயிகள் இனி பாம்புக்கறியை சாப்பிடும் நிலை ஏற்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் வறட்சி இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனாலும் வறட்சி நிவாரணம் கொடுக்கவில்லை. இப்போது பயிர்கள் காய்ந்து கருகிவிட்ட நிலையில், கடனை தள்ளுபடி செய்தால்தானே விவசாயிகள் வாழ முடியும்? வட்டியை தள்ளுபடி செய்து என்ன பயன்?
காவிரி இல்லை
தண்ணீர் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை டெல்லியில் உள்ள பாஜக அரசு தடுத்துவிட்டது. உச்சநீதிமன்றமே காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க சொல்லியும் மத்திய அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நிவாரணம் இல்லை
இந்தக் காலக்கட்டத்தில் வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பது மேலோட்டமாக திருப்தியாக இருக்குமே தவிர, உட்கூறுகள் மோசமாக உள்ளன. ஏக்கருக்கு 25 ஆயிரம் வேண்டும். அதனை தமிழக அரசு கொடுக்கவில்லை.
கடன் தள்ளுபடி
வரலாறு காணாத வறட்சியை கண்டுவிட்டோம். சாகுபடி செய்த பயிர்கள் எல்லாம் காய்ந்துவிட்டன. நான் எப்படி என் குடும்பத்தை காப்பாற்றுவது? எனவே, வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் இழப்பீடு கொடுக்க வேண்டும். நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் கொடுக்க வேண்டும். புஞ்சை ஏக்கருக்கு 25 ஆயிரம் தர வேண்டும்.
பாம்புக்கறி
வாழை ஏக்கருக்கு 5000 ரூபாய் கொடுத்தால் கட்டுபடியாகுமா? கரும்புக்கு 50 ஆயிரம் தர வேண்டும். இதை எல்லாம் கொடுத்தால்தான் வறட்சி என்று அறிவித்ததற்கு ஒரு அர்த்தம் ஏற்படும். இல்லை என்றால், இதுவரை எலிக்கறியை சாப்பிட்டு வந்த விவசாயிகள் இனி பாம்புக்கறியை தின்ன வேண்டியதுதான். வேறு வழியில்லை எங்களுக்கு என்று அய்யாகண்ணு கூறினார்.