விலங்குகளுக்கு வைத்த சுருக்கில் மாட்டி சிறுத்தை பலி – இருவர் கைது!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் கடந்த 15 ஆம் தேதி மாலை இடுப்பில் சுருக்கு கம்பி மாட்டியதால் தப்பிக்க முடியாமல் போராடிய ஒரு பெண் சிறுத்தை பலியானது.
இங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள் வந்து பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க விவசாயிகள் சிலர் வேலிகளில் சுருக்கு கம்பிகளை அமைத்து வருகின்றனர். சிலர் மான் பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடவும் சுருக்கு கம்பிகளை பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில்தான் வேலியில் கட்டப்பட்டிருந்த சுருக்கில் சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. அந்த சுருக்கு கம்பியை அறுத்துக்கொண்டு தப்பிய சிறுத்தை அங்குள்ள ஒரு மரத்தில் ஏறியுள்ளது.
அப்போது சிறுத்தையின் உடலில் சிக்கியிருந்த சுருக்கு கம்பி மரக் கிளையில் சிக்கியதால் சிறுத்தையால் மேற்கொண்டு செல்ல முடியாமல் அந்த மரக் கிளையிலேயே தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீலகிரி வடக்கு மாவட்ட வன அலுவலர் சவுந்தரபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சுருக்கு வைத்த குற்றவாளிகளை கண்டறிந்தனர்.
அணிக்கொரை கிராமம் தூனேரி பாலம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் குழந்தைசாமி, கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டு நீலகிரி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.