ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்... முதல்வர்
ஏரி, குளங்களை தூர்வாரும் பணியின்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து செல்லலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சேலம்: நீர் நிலைகளை தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மாநில அரசு செய்து வருகிறது. இந்நிலையில் 83 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நீராதாரமான மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கடும் வறட்சி நிலவுகிறது. ரூ. 100 கோடி செலவில் 1519 ஏரிகள் முதல் கட்டமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகளில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொண்டு செல்லலாம் அதுவும் இலவசமாக. விவசாயிகள் இல்லாதோர் வண்டல் மண்ணை எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர் அணையில் தூர்வாருவதன் மூலம் 10 சதவீதம் கூடுதல் நீரை அதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.