வங்கி கடனை கட்ட முடியல… பயிரும் கருகிடுச்சி.. வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
பயிர்கள் காய்ந்துவிட்டதால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத மன வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்: வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகில் உள்ளது செங்கராயன்கட்டளை. இந்த கிராமத்தில் வசித்து வந்தார் விவசாயி ரகுபதி. இவர் வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளார். மேலும் தனி நபர்கள் சிலரிடமும் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில், உரிய தண்ணீர் இல்லாததால் வறட்சி ஏற்பட்டு பயிர் முற்றிலும் கருகியது. அதனால் பெரும் மன வேதனையில் விவசாயி பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, வங்கி அதிகாரிகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ரகுபதி, வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால், கடந்த 15ம் தேதி பயிர்களுக்கு தெளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
விஷம் குடித்தது தெரிந்த உடன் உறவினர்கள் அவரை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்