அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல... ஏக்கருக்கு ரூ. 25000 நிவாரணம் வேண்டும் - விவசாயிகள்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது மகிழ்ச்சிதான் என்றாலும் அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 62% குறைவாக பெய்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிகள் பொய்த்துப்போனது. டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களையும் வறட்சி விட்டு வைக்கவில்லை. கடும் வறட்சியினால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கருகிய பயிர்களைப் பார்த்து அதிர்ச்சியிலும் பல விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதனையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழக விவசாயிகளின் நிலவரி ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்படும்.33 சதவீதத்திற்கு அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கால அளவு 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.வங்கிக் கடன் மத்தியக் கால கடனாக மாற்றப்படும். நிவாரண உதவியாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5,465 ரூபாய் வழங்கப்படும்.மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும்.மஞ்சளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் அளிக்கப்படும்.இதற்கான அன்னவாரி சான்றிதழ் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.மேலும் வறட்சி நிவாரண கோரிக்கை மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இதுவரை 17 விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தது ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்தாலும், நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்தாகும்.
ஏக்கருக்கு ரூ. 25000 முதல் 30000 வரை தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுவது தவறானது. உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் மட்டுமே நிவாரணம் தருவது எப்படி சரியாகும். நிவாரணத்தொகையை அதிகரிக்க வேண்டும். வங்கிக்கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். எனவே பயிர்கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்தாலும் உடனடியாக அதற்குரிய சம்பள பணத்தை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.